Friday, December 25, 2009

இராமாயணம் ஒரே சுலோகத்தில்


la-rama.jpg
ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்
வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்
ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்
சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்
வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்
சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்
லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்
பஸ்சாத் - பின்னர்
ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்
ஏததி ராமாயணம் - இவையே இராமாயணம்!
--
ᄊムん乇

Saturday, December 5, 2009

ஆதித்ய ஹ்ருதயம்



 http://www.astrologyforu.com/img/festivals/sun-god-lord-aditya.jpg
ஆதித்ய ஹ்ருதயத்தின் 21 முதல் 25 வரையிலான சுலோகங்கள்:

தப்த சாமீகராபாய வஹ்னயே விஸ்வகர்மணே
நம: தமோபிநிக்னாய ருசயே லோகசாக்ஷிணே

taptha chaamiikaraabhaaya vahnayE visva karmanE
nama: thamObhinignaaya rucayE lOkasAkshinE


தப்த சாமீகராபாய - உருக்கிய பொன்னின் நிறத்தைக் கொண்டவருக்கு
வஹ்னயே - தீ வடிவானவருக்கு
விஸ்வகர்மனே - உலகத்தின் அனைத்து செயல்களையும் செய்பவருக்கு
தம அபிநிக்னாய - இருளை அழிப்பவருக்கு
ருசயே - உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு
லோக சாக்ஷினே - உலகத்தில் சாட்சியாக நிற்பவருக்கு
நம: - வணக்கங்கள்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஸத்யேஷ கபஸ்திபி:

nasayathyEsha vai bhuutham thadEva Srujathi prabhu:
pAyathyEsha tapathyEsha varSathyEsha gabhastibhi:

நாசயதி ஏஷ வை பூதம்: - உயிர்களை எல்லாம் இவனே அழிக்கிறான்
தத் ஏவ ஸ்ருஜதி - அவற்றை இவனே பிறப்பிக்கிறான்
ப்ரபு: - இறைவன் இவனே
பாயதி ஏஷ - இவனே காக்கிறான்
தபதி ஏஷ - இவனே வெயிலாகக் காய்கிறான்
வர்ஸதி ஏஷ - இவனே மழையாகப் பொழிகிறான்
கபஸ்திபி: தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால்
இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் செய்கிறான். இவனே வெயிலாகவும் மழையாகவும் இருக்கிறான்.

ஏஷ சுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸ்டித:
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரினாம்

yEsha supthEsu jAkarthi bhUthEsu pariniStitha:
yEsha yEvAknihOthram cha phalam chaivaaknihOthrinAm

ஏஷ - இவனே
பூதேஷு - எல்லா உயிர்களிலும்
சுப்தேஷு ஜாகர்தி பரிநிஸ்டித: - அவை உறங்கும் போதும் விழிப்பாக நிலை நிற்கிறான். (அவற்றின் உயிராக நிற்கிறான்)
ஏஷ ஏவ அக்னி ஹோத்ரம் ச - இவனே தீ வழிபாட்டின் வடிவமாகவும் இருக்கிறான்
பலம் ச ஏவ அக்னி ஹோத்ரினாம் - அத்தீவழிபாட்டின் பயனாகவும் இருக்கிறான்

வேதாஸ் ச க்ரதவசைவ க்ரதூனாம் பலம் ஏவ ச
யானி க்ருத்யானி லோகேஷு சர்வ ஏஷ ரவி: ப்ரபு:

vEdASca krathavascaiva krathUnAm phalamEva ca
yAni kruthyAni lOkEshu sarva yEsha ravi: prabhu:

ச ஏவ - இவனே
வேதா: - வேதமாகவும்
க்ரத: - சடங்குகளாகவும்
க்ரதூனாம் பலம் - சடங்குகளின் பயனாகவும்
ஏவ ச - இவனே இருக்கிறான்
லோகேஷு - இவ்வுலகத்தில்
யானி க்ருத்யானி - என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ
சர்வ ஏஷ - அவை எல்லாமும் இவனே
ரவி: - ஒளி படைத்தவன்
ப்ரபு: - இறைவன்; தலைவன்

ஏனமாபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச
கீர்த்தயேன புருஷ: கச்சின் நாவஸீததி ராகவ:

yEnamApathSu kruchrEshu kAnthArEshu bhayEshu cha
kIrthayEna purusha: kascin nAvaSithathi rAghava:


ராகவ: - இராகவா!
ஏனம் - இவன்
க்ருச்ரேஷு ஆபத்ஸு - எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும்
காந்தாரேஷு - காடுகளிலும்
பயேஷு ச - பயமுறுத்தும் நேரங்களிலும்
கீர்த்தயேன புருஷ: - இவனைப் பாடி வழிபடுவோரை
கச்சின் - எப்போதும்
நாவஸீததி - கைவிடமாட்டான்.

--
ᄊムん乇

Tuesday, November 24, 2009


mahendran-KrishnaCowherdBoysEating

ஆகா. அழகான பாடல் கேட்கிறதே அங்கே. யார் பாடுவது?
ஓ. கடைத்தெருவில் இந்த இடைச்சிறுவர்கள் பாடிக் கொண்டு செல்கிறார்கள். என்ன விந்தை? பால், தயிர், வெண்ணெய் என்று கூவி விற்காமல் இந்தச் சிறுவர்கள் வேறு ஏதோ பாடிக் கொண்டு செல்கிறார்களே. நாமும் கூர்ந்து கேட்போம்.
ச்ரி க்ருஷ்ண விஷ்ணோ மது கைடபாரே
பக்தானுகம்பின் பகவன் முராரே
த்ரயஸ்வ மாம் கேஸவ லோகநாத
கோவிந்த தாமோதர மாதவேதி
அருமை அருமை. என்ன ஒரு சந்தம். இவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வரும் போது இந்த அழகான பொருள் நிறைந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே. இந்த இனிய பாடலைக் கேட்பதற்காகவே கடைத்தெருவிற்கு அடிக்கடி வர வேண்டும்.
இந்த நான்கு வரிகளில் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிவிட்டார்கள். க்ருஹ்ணோதி இதி க்ருஷ்ண என்பார்கள் பெரியவர்கள். கவருபவன் எவனோ அவனே கிருஷ்ணன். க்ருஷியதி இதி க்ருஷ்ண என்றும் சொல்வார்கள். பண்படுத்துபவன் என்பதால் இவன் கிருஷ்ணன். அவன் எங்கும் நிறைந்தவன். விஷ்ணு. மது கைடபர்கள் என்னும் அசுரர்களின் எதிரி. பக்தர்களுக்கு அருளுபவன். வலிமை, புகழ், செல்வம், அறிவு, அழகு, பற்றின்மை என்ற ஆறு குணங்கள் கொண்டவனே ஆதி பகவன். முரன் என்னும் அசுரனின் எதிரி. அழகான சுருண்ட முடியைக் கொண்டவன் கேசவன். உலகங்களுக்கெல்லாம் தலைவன் லோகநாதன். அவனை இந்தச் சிறுவர்கள் கடைத்தேற்ற அழைக்கிறார்கள். த்ரயஸ்ய மாம் என்று நாம் ஒவ்வொருவரும் பாட வேண்டுமே. பாடுவோமே. கண்ணா கோவிந்தா தாமோதரா மாதவா எம்மைக் கரையேற்று. எம்மைக் கரையேற்று.
--
ᄊムん乇

Saturday, November 7, 2009

வந்தே பிருந்தாவனசரம்


la-rama.jpg
யாதவாத்புதயம்! கண்ணனின் திருக்கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு வடமொழிக் காவியம்! வேதாந்த தேசிகன் என்னும் வைணவ ஆசாரியர் இயற்றியது! இதன் முதல் சுலோகம் இந்த சுலோகம். மிக அழகான சுலோகம்.


வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்


கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு! அந்த அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்! பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்!

அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார்.

சஹஸ்ரநாமம் என்றால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.

ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது! கிருஷ்ண ஜயந்தியில் பிறந்தவன் கண்ணன்!

தாம வைஜயந்தீ விபூஷணம்! மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர் மாலை!

காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம். அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டிருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்!

அந்த முழுமுதற்பொருளை நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!

--
ᄊムん乇

Tuesday, October 13, 2009



Yogi.jpg

நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

நாரி - அழகான பெண்களின்
ஸ்தனபர - அழகிய கொங்கைகளையும்
நாபிதேசம் - வயிற்றுப் பிரதேசங்களையும்
த்ருஷ்வா - பார்த்து
மாகா மோஹ ஆவேசம் - மயக்க ஆவேசம் அடையாதீர்கள்.
ஏதன் - இவையெல்லாம்
மாம்ஸ வஸ ஆதி விகாரம் - புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள்
மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
 கோவிந்தனை வணங்குங்கள்.


புலனடக்கம் மேற்கொண்டு தன்னை உணர விரும்புபவர்களுக்கு ஏற்ற அறிவுரை இது. இங்கே ஆணை முன்வைத்துப் பெண்ணின் அழகைப் பற்றி சொல்கிறார். ஆணின் திரண்ட தோள்களையும் நிமிர்ந்த நெஞ்சினையும் வீரம், அன்பு தெறிக்கும் முகத்தையும் கண்களையும் காது மடல்களையும் கூரிய மூக்கினையும் சிவந்த வாயிதழ்களையும் அந்த இதழ்களின் மேல் வளர்ந்திருக்கும் முறுக்கு மீசையையும் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன - அப்படிப் பேசப்படுவதாலும் நடைமுறையில் பார்ப்பதாலும் ஆணின் இந்த அழகுகள் பெண்ணைக் கவர்கின்றன என்று தெரிகிறது. அதனால் இந்தப் பாட்டைப் பெண்ணை முன் வைத்துப் பாடியிருந்தால் ஆணின் அழகைக் கூறி அந்த அழகும் மாம்ஸ வசாதி விகாரம் என்று சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எக்காலத்திலும் ஆணை மயக்கும் பெண்ணின் அங்கங்களில் முதன்மையானவற்றை இங்கே சொல்லியிருக்கிறார். சொல்வதற்குப் பெரிய பட்டியல் இருந்தாலும் எடுத்துக்காட்டாக இருப்பதிலேயே அதிகம் கவரும் இரண்டை மட்டும் சொன்னால் போதும் என்று நினைத்தாரோ என்னவோ மார்பகங்களையும் தொப்புளையும் மட்டும் சொல்லி மற்றவற்றை உய்த்துணர விட்டுவிட்டார்.

ஆண் பெண்ணைப் பற்றியும் பெண் ஆணைப் பற்றியும் நினைக்கும் போதெல்லாம் முன் வந்து நிற்பவற்றை 'ஊனும் கொழுப்பும் மாறி நிற்கும் வடிவங்கள்' என்று மீண்டும் மீண்டும் நினைத்தால் தானே புலனடக்கம் வந்துவிடும் என்பது உண்மை தான்.

Tuesday, September 29, 2009

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்


images?q=tbn:ANd9GcQ6Co1-_9TAImnjylkplhQSOdkBwxwN8Os89oCnn910Qx8FwGydSw
சபரிமலை செல்லும் அன்பர்கள் பலருக்கும் பாடமான ஸ்லோகம் தான் இது. யார் எழுதியது என்று தெரியவில்லை. பலருக்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திருவடி பணிந்து இங்கு இதனை இடுகிறேன்.


லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.