ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க, கூட்டணி தொடர்பான,
சில நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது. அதை தி.மு.க., தரப்பு ஏற்றுக்
கொண்டதால், காங்கிரஸ் தன் ஆதரவை தி.மு.க.,வுக்கு அளித்து உள்ளது.
டில்லி,
ரகாப்கஞ்ச் சாலையில் உள்ளது, "வார் ரூம்' எனப்படும் போர் அறை. அங்கு
வைத்து தான், காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய முடிவு எடுக்கப்படுவது
வழக்கம்.
ஆலோசனை:
இம்மாதம், 14ம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல்,
சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம்,
அங்கு நடந்து உள்ளது. அதில், தே.மு.தி.க., தலைமை ஆதரவு கேட்டுள்ளது
என்றும், அதுபற்றி கருத்துக்களை தெரிவிக்கும்படியும் மேலிடத் தலைவர்கள்
கேட்டுக் கொண்டனர்."யாருமே நம்மிடம் ஆதரவு கேட்டு வராத நிலையில்,
தே.மு.தி.க., வந்துள்ளது. எனவே, அவர்களை ஆதரிப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை'
என, தமிழகத் தலைவர்கள் கூறி உள்ளனர்.இது தவிர, தி.மு.க., மீது, தமிழக
காங்கிரசில் அடிமட்டத் தொண்டர்கள் எல்லாம், பெரும் அதிருப்தியில்
உள்ளதாகவும், அந்தக் கட்சிக்கு ஆதரவு தருவதை, தொண்டர்கள் விரும்பவில்லை
என்ற கருத்தும், பதிவு செய்யப்பட்டது.பின், தி.மு.க., நேரடியாகவே அணுகி,
ஆதரவு கேட்டதை அடுத்து, நிலைமை தலைகீழாக மாறியது.கனிமொழியை ஆதரிக்கும்
முடிவை, காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேலும், குலாம்நபி ஆசாத்தும் இணைந்து
எடுத்து உள்ளனர். இதுப்பற்றி, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல்
வாஸ்னிக்கிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த விவரங்கள் எதுவுமே, தமிழக
காங்கிரஸ் தலைவர்களிடம், ஆலோசிக்கப்படவில்லை.
காங்., நிபந்தனைகள் :
ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் விதித்த சில நிபந்தனைகள் குறித்த விவரம் வருமாறு:
*லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும்.
*கர்நாடகாவைத்
தவிர, தென் மாநிலங்களில், வேறு எங்கும் காங்கிரசின் நிலை சரியில்லை. எனவே,
தமிழகத்தில், ஒரு மெகா கூட்டணி அமைய வேண்டியது அவசியம். காங்கிரஸ்
தலைமையிலான அந்தக் கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் பா.ம.க.,
ஆகிய நான்கு கட்சிகளும், இடம்பெற வேண்டும்.
*இலங்கை விவகாரங்களிலும் கூட, மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒட்டியே, தி.மு.க., நடந்து கொள்ள வேண்டும்.
*பார்லிமென்ட்டில்
உணவு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற, காங்கிரஸ்
முயற்சி எடுக்கும்போது, குறுக்கே நிற்கக்கூடாது. தவிர, பொருளாதார
சீர்திருத்தங்கள் சிலவற்றை, நிதியமைச்சர் வரும் கூட்டத் தொடர்களில்
அறிவிப்பார். அதற்கும், உறுதுணையாக தி.மு.க., இருக்க வேண்டும்.
*மதச் சார்பின்மை பற்றி தீவிரமாகப் பேச ஆரம்பிக்க வேண்டும்.
*மதவாத
சக்திகளுக்கு எதிராக, பெரிய அளவில் குரல் கொடுக்கும்போது, குஜராத்
முதல்வர், நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர், ஜெயலலிதாவுக்கும் நிலவி
வரும் நட்பு குறித்து, விமர்சனம் செய்து, அதை காங்கிரஸ் கூட்டணிக்கு,
சாதகமாக மாற்ற வேண்டும்.இந்த நிபந்தனைகளை, காங்கிரஸ் தரப்பில்
வைக்கப்பட்டபோது, அனைத்தையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதாக,
தி.மு.க., தலைமையும் கூறி விட்டது.
"2ஜி' ஊழல் :
"2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ
தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) விசாரிக்கிறது.
இந்தக் குழுவின் வரைவு அறிக்கை, சமீபத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியது. பின், ஜே.பி.சி., இன்னும் கூடவில்லை. இந்தக் குழுவில்,
காங்கிரஸ் கூட்டணி பலம் குறைவாக உள்ளது.
தி.மு.க., - எம்.பி., திருச்சி
சிவாவின் பதவிக்காலம் முடிவதும், இக்குழுவின் உறுப்பினராக உள்ள, காங்கிரஸ்
எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றதும்,
காங்கிரஸ் கூட்டணி உறுப்பினரில், இரண்டு எண்ணிக்கை குறைந்து விட்டது.இதைச்
சரி செய்ய, தி.மு.க.,வில் இருந்து, ஒரு எம்.பி.,யை ஜே.பி.சி.,
உறுப்பினராக்க வேண்டும் என்பது காங்கிரசின் நிபந்தனை. அந்த எம்.பி.,யும்,
ஜே.பி.சி.,யில் காங்கிர”க்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும். இந்த நிபந்தனைகளை,
தி.மு.க., ஏற்றுக் கொண்டதாலேயே, ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்
கனிமொழிக்கு ஆதரவு தர, காங்கிரஸ் ஒப்புக் கொண்டது என்ற தகவலும் வெளியானது.
ஜே.பி.சி.,யில் மொத்தம், 30 உறுப்பினர் இருக்க வேண்டும். இதில், பா.ஜ.,
உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம், 15 உறுப்பினர் உள்ளனர். இந்தக் குழுவில்
பெரும்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதே காங்கிரசின் எண்ணம்.அதற்காகவே,
தி.மு.க.,வை, இந்தக் குழுவுக்குள் இழுத்துப் போட விரும்புகிறது. அத்துடன்,
சமாஜ்வாதி கட்சியுடனும், காங்கிரஸ் பேசி வருகிறது. அக்கட்சியில் இருந்தும்
ஒரு உறுப்பினரை நியமிக்க வைத்து, நினைத்ததைச் சாதிக்க காங்கிரஸ் முடிவு
செய்துள்ளது.
காங்., தலைவர்களிடம் தே.மு.தி.க., கெஞ்சல் :
டில்லியில் முகாமிட்டிருந்த தே.மு.தி.க., நிர்வாகிகள் இருவர், மூன்று
நாட்களுக்கு முன், சென்னை திரும்பினர். அவர்கள், சென்னை திரும்பும் முன்,
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம், "எங்களுக்கு ஆதரவு
கொடுக்காவிட்டாலும், பரவாயில்லை; தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிப்பதை, கடைசி
நேரத்தில் அறிவிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர்."எதற்காக, கடைசி
நேரத்தில் அறிவிக்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர்கள் கேட்டபோது, "எங்கள்
கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, தி.மு.க.,வினர் காய் நகர்த்துகின்றனர்.
இதற்கு, எங்கள் கட்சி மாநில நிர்வாகிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். நீங்கள்
ஆதரவு கொடுத்து விட்டால், பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் யார் என்பது
தெரியாமல் போய்விடும். எனவே, அவர்களை அடையாளம் காண வேண்டும் என்றால்,
எங்களுக்காக, இந்த உதவியை நீங்கள் செய்யுங்கள்' என, கெஞ்சியுள்ளனர்.
இதையடுத்து, தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிப்பதை, காங்கிரஸ் தலைமை
தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.