Saturday, December 24, 2011

பாசத்திற்கு இன்னொரு பெயர் கபாலி

பாசத்திற்கு இன்னொரு பெயர் கபாலி
திருச்சியில் இருந்து வயலூர் போகும் வழியில் இருக்கிறது சோமரசம் பேட்டை. இந்த வழியாக போகும்போது கண்ணில்படுகிறது ஒரு போஸ்டர். ஒரு நாயின் படம் பெரிதாகப்போடப்பட்டு, எங்கள் ஆருயிர் கபாலிக்கு கண்ணீர் அஞ்சலி,இங்ஙனம் சலூன் நண்பர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

காசில்லாத மனிதனை தூசுக்கு சமமாக மதிக்கும் "ஈரமுள்ள' மனிதர்கள் நிறைந்த இந்த உலகில்,ஒரு நாய் இறந்ததற்காக " போஸ்டர் 'அடித்து தன் துக்கத்தை தெரிவிக்கும் ஆட்களும் உலகத்தில் இருக்கிறார்களா என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது. யார் அவர் என்று விசாரித்ததில் கிடைத்த விவரத்தால் இதயம் கனத்தது.

"என் பெயர் பழனிவேலுங்க, நான் சோமரசம் பேட்டையை அடுத்துள்ள அல்லித்துறையில் குடியிருக்கேன், இருபது வருடமா முடிவெட்டுறதுதான் என் தொழில். இருபது வருடத்திற்கு முன்னால் தினக்கூலிக்கு முடி வெட்டிவிடும் ஆளாய்த்தான் இருந்தேன். என் கபாலி (நாய்) வந்த நேரம் நான் படிப்படியா முன்னேறி, இன்னைக்கு சொந்தமா முடிவெட்டும் கடைவைத்து, இரண்டு பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன்''.

என் கபாலி நான் பெக்காத பிள்ளைங்க, தெரு நாய் ஒன்று பிரசவித்து போட்ட குட்டியில ஒண்ண எடுத்துட்டு போய் வீட்டிலே வளர்த்தேன். அதுதான் கபாலி. அது எனக்கு மட்டுமில்ல எங்க அம்மா, மனைவி உள்ளிட்ட குடும்பத்துல அனைவருக்கும் ரொம்ப செல்லம். எங்கம்மா செவ்வாய், வெள்ளி விரதம் இருந்தா, அதுவும் விரதம் இருக்கும். என்னதான் கெஞ்சினாலும் சாப்பிடாது. சாயந்திரம் விரதம் முடிச்சு சாப்பிடும்போதுதான் சாப்பிடும். நான் காலையிலே 6 மணிக்கெல்லாம் கடையை திறக்கவந்திருவேன். வரும்போது கபாலி முகத்தை பார்த்துட்டுதான் வருவேன். அதுவும் என்னை வாஞ்சையோடு வழியனுப்பி வைக்கும். எப்பவாவது அசந்து படுத்திருக்கும்போது அதை எழுப்ப வேண்டாமேன்னுட்டு நான் கடைக்கு வந்திடுவேன். அன்னைக்கு கபாலி எழுந்ததும் என்னைத் தேடும், கடைக்கு போனது தெரிந்ததும், ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்க கடைக்கு ஒரே ஒட்டமா வந்து என்னை பார்த்துட்டு, கண்ணுல தன்னுடைய சிரிப்பைக் காட்டிட்டு திரும்ப போயிடும்.

உடம்புக்கு முடியாத நிலையில் நான் கடைக்கு வந்தால், கடையின் வாசலிலேயே நின்னு நான் இருமுவதை கவலையோடு பார்க்கும். கடையை பூட்டுறவரை கூட இருந்து கூட்டிட்டு போகும். உடம்பு சரியாகி நான் பழையபடி சிரிக்கும்போதுதான், கபாலியின் கண்ணிலேயும் சிரிப்பும், நிம்மதியும், சந்தோஷமும் தென்படும். யாராவது விருந்தாளிங்க வந்துட்டு திரும்ப ஊருக்கு போகும்போது கபாலியும் வழியனுப்ப பஸ் நியைத்திற்கு வந்துவிடுவான். எதற்கும் ஆசைப்படட்டதுல்ல, எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். எங்கள அப்படி பார்த்துக்கிட்டான், பாதுகாத்திட்டுருந்தான்... சொல்லும்போதே குரல் கம்முகிறது. கண்ணில் நினைவு நாடாக்கள் காரணமாக கண்ணீர் கசிகிறது.

இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, 17 வருஷமா எங்க குடும்பத்துல ஒரு செல்லமா இருந்தவன். திடீர்னு முடியாம படுத்துட்டான், நாங்க நிறைய மருந்து கொடுத்து பார்த்தோம். "இதுக்கான' டாக்டரை வீட்டிற்கே கொண்டுவந்து காமிச்சோம். ஆனால் அவர் சொன்னாரு, ஒரு நாயோட ஆயுசு 14 வருஷந்தான்; உங்க அன்பு காரணமாக கூடுதலாக மூணு வருஷம் வாழ்ந்திருச்சு, அதுனால இனி அது போற காலம்தான், எந்த மருந்தும், மாத்திரையும் வேலை செய்யாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

அன்னையிலேருந்து மூணு நாள் கபாலி பச்சத்தண்ணீர் கூட சாப்பிடாம படுத்த படுக்கையாக கிடந்தான், நாங்களும் யாரும் சாப்பிடலை, எல்லோரையும் முழிச்சு, முழிச்சு பார்த்தான், எங்களப் பிரியப்போற வேளை வந்திருச்சுன்னு தெரிஞ்சுகிட்டானோ, என்னவோ, அவன் கண்ணுல இருந்து கண்ணீர் தாரை, தாரையா வழிஞ்சு ஒடுது, எல்லாரும் பார்த்துட்டு இருக்கும் போது அவனோட ஜீவன் அடங்கிடுச்சு.

கதறி, கதறி எங்களாலே அழ முடிஞ்சுதே தவிர கபாலிய காப்பாத்த முடியலை. வீட்டு வாசல்லேயே அடக்கம் பண்ணிட்டு அங்க ஒரு செடி நட்டு வளர்த்துட்டு வர்ரேன். கபாலி வந்த பிறகு எங்களுக்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கு. பணம், பொருளைவிட பாசம்னா என்னான்னு கபாலிதான் கத்துக் கொடுத்தான். அவனுக்காக அஞ்சலி செலுத்தி என்னால போஸ்டர்தான் ஒட்டமுடிஞ்சுது.

கபாலி இறந்ததுல இருந்து என்னோட பலமே போன மாதிரி இருக்கு, இறந்து எவ்வளவோ நாளாயிடுச்சு, ஆனாலும் நான் கடையில வேலை பார்க்கும்போது அவ்வப்போது என்னையுமறியாமல் எட்டிப்பார்க்கிறேன். என் கபாலி என்னைத் தேடி வந்திருக்காணான்னு என் கண் இன்னமும் தேடத்தான் செய்யுது, என்று கலங்கிய கண்களுடன் பழனிவேலு சொல்லி முடித்தபோது அவரது கண்கள் அதிகமாகவே கலங்கியிருந்தது, கூடவே நமது கண்களும்.